வாழ்நாள் கல்வி

பப்பாளி சாகுபடி

பப்பாளி சாகுபடி

பப்பாளி சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


பப்பாளி இரகங்கள்

கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, கோ.6, கோ.7 மற்றும் கூர்க்கனிடியூ மற்றும் சூரியா இவற்றுள் கோ.2, கோ.5 மற்றும் கோ.6 பப்பெயின் எடுப்பதற்கும், உண்பதற்கும் உகந்தது. கோ.3, கோ.7 இருபால் இரகங்கள்.

வயது

24 -30 மாதங்கள்

 

பப்பாளி மண் மற்றும் தட்பவெப்பநிலை

பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

 

பப்பாளி விதை அளவு

ஏக்கருக்கு அரை கிலோ விதை

பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைத்து, பிறகு, ஓலைப்பாய் விரித்து,அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறினால் விதையும் தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம்.விதைத்ததில் இருந்து 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும் 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும்.

 

பப்பாளி ஒருங்கிணைந்த மேலாண்மை

15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா

பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும், இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும்.

பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்

6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும்.

பூ பூக்கும் நேரத்தில்தான் பப்பாளியில் ஆண், பெண் அடையாளம் காணமுடியும் கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம். 400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுகிறார்கள். இதனால்அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது.7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல்கிடைக்கும்.13-ம் மாதத்தில் மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும், பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.

நுனித்தண்டழுகல் நோய்

அறிகுறிகள்

பப்பாளியில் தண்டின் முனை அழுகல் மற்றும் பழத்தின் மேல் அழுகலை தூண்டுகின்றது. இது பொதுவாக மென்மையானது, விளிம்புகளில் நீர் கோர்ப்பதை தூண்டி பழத்தின் உட்புறத்தை நிறம் மாறச் செய்கின்றது. நைவுப்புண் பி.தியோப்ரோமே கருப்பு நிறமாக மாறி மேற்பரப்பு கடினமாகவும், இணைந்து பூசணத்தை தோற்றுவிக்கும். பழுத்த பழங்கள் மற்றும் பாதி பழுத்த பழங்களின் மேல் நோய் தாக்குதல் விரைவாக ஏற்படும். அழுகல் முதலில் ஆழ்ந்த பச்சை நிறத்தில் இருக்கும் பின் நீர் கோத்தல் போன்ற புள்ளிகள் தோன்றும். பாதிக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து ஆழ்ந்த பழுப்பு நிறமாக மாறிவிடும். நோய்க் காரணிகளால் நிறை பூசணங்கள் நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் தோன்றும். பழத்தண்டுகள் பாதிக்கப்பட்டு பழங்கள் கீழே விழுந்து விடுகின்றன.

கட்டுப்பாடு

49-50 செல்சியஸில் 20 நிமிடங்கள் சுடு நீரில் நேர்த்தி செய்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம். 

மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்

தாக்கப்பட்ட இலை மற்றும் காய்களில் வெண்ணிற பஞ்சால் மூடப்பட்டது போல் காணப்படும். மஞ்சள் நிறமான காய்ந்த, வளைந்து, நெளிந்த வளர்ச்சி குன்றிய குருத்துகள் காணப்படும். சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற திரவம் இலை மற்றும் இதர பாகங்களில் தென்படும். தேன் போன்ற திரவத்தின் மேல் ‘கேப்னோடியம்’ எனப்படும் கரு நிற பூசணம் படர்ந்திருக்கும்.

கட்டுப்படுத்தும் மேலாண்மை

பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும்போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு (10 கிலோ / எக்டருக்கு) என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல். ‘தயோமீத்தாக்சாம்’ 2 கிராம் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தல். குளவி ஒட்டுண்ணியான ‘அசிரோபேகஸ் பப்பாயினை’ வயலில் விட்டு கட்டுப்படுத்ததுல் (ஏக்கருக்கு 50 எண்கள் வீதம்) போன்ற வழிமுறைகளை கையாண்டால் பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

 

பப்பாளி அறுவடை

பழங்களின் தோல் சற்றே மஞ்சள் நிறமாக வரும் போது அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்

கோ.2 ரகமாக இருந்தால் ஏக்கருக்கு 250 டன்களும், கோ. 3 ரகத்தில் 120 டன், கோ.5 ரகத்தில் 250 டன், கோ. 8 ரகத்தில் 160 டன், கோ.7 ரகத்தில் 225 டன்களும் மகசூல் கிடைக்கும்